நல்ல வாழ்க்கை என்பது என்ன? நிறையப் பணம் சம்பாதிப்பதா? உயர்ந்த பதவியை அடைவதா? புகழையும் செல்வாக்கையும் பெறுவதா? இவை எல்லாமே முக்கியம்தான். ஆனால் இவற்றைத் தாண்டிய சில விஷயங்களும் இருக்கின்றன. மனித வாழ்க்கையை 'பணம், மனம், பொருள் M1, M2, M3' என மூன்று நிலைகளில் அணுகுகிறார் ஆசிரியர் சோம. வள்ளியப்பன். தனக்காகவும் தன் குடும்பத்துக்காகவும் சம்பாதிப்பதும் முன்னேறுவதும் முதல் நிலை. எவ்வளவு போதும், எது உண்மையில் முக்கியம் என்று தீர்மானிப்பது மனம். இது இரண்டாவது நிலை. தனக்கான தேடலைத் தாண்டி, பிறருக்கும் சமூகத்துக்கும் பயன்படும் வகையில் வாழத் தொடங்குவது மூன்றாவது நிலை. உன்னத நிலை. இந்த மூன்று நிலைகளையும் அடையும் வழியை நமக்கு காட்டுகிறார் நூலாசிரியர் வள்ளியப்பன். 'நான் என்ன சாதிக்க வேண்டும்?' என்கிற கேள்வியிலிருந்து 'என் வாழ்க்கை எதற்குப் பயன்பட வேண்டும்?' என்கிற கேள்வியை நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறது இந்நூல். குறிப்பாக, பொன்னோடும் பொருளோடும் வாழ்வது மட்டும் வாழ்க்கை அல்ல, வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் வேண்டும். வாழ்வதற்குப் பொருள் வேண்டும், வாழ்வதிலும் பொருள் வேண்டும் என்பதை விளக்கும், விவரிக்கும், வலியுறுத்தும் நூல். நிதி நிர்வாகம், பொருளாதாரம், சுயமுன்னேற்றம், எமோஷனல் இன்டெலிஜென்ஸ் உள்ளிட்ட பல துறைகள் சார்ந்து எழுதியும் பேசியும் வரும் சோம. வள்ளியப்பனின் 100வது நூல் இது.