கம்பன் யாத்த இரமாயண காவியத்தின் மீது தீ பரவட்டும் என்று எழுச்சிப் போர் முரசு கொட்டினார் அறிஞர் அண்ணா. மிகப் பெரிய பண்டிதர்களான ரா.பி.சேதுப் பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்றவர்களின் கருத்துகளை மறுத்துப் பேசி, கம்பராமாயணம் தமிழர்களை எப்படியெல்லாம் இழிவுபடுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டு களுடன், அண்ணா அவர்களுக்கே உரித்தான நளினத்துடனும், கம்பீரத்துடனும் விவாதக் கணைகளைத் தொடுத்தார். மறுத்துப் பேசியவர்களில் ஒருவர் எனக்கு உடல் நலம் சரியில்லை என்று கூறி நழுவினார். இன்னொருவர் தோல்வியையும் நாகரிகத்தோடு ஏற்றுக் கொண்டார். காடேக ராமன் கிளம்பும்போது உடன் வரப் புறப்பட்ட சீதையுடன் வாதிடுகையில், சீதை கூறும் மொழியின் பகுதியையும், சீதையை இராவணன் எடுத்துச் சென்ற விதத்தையும் வால்மீகி கூறியுள்ளபடியே கம்பர் எடுத்து எழுதியிருப்பின், அந்த ஆரியப் பாத்திரங்களிடம் ஆபாச குணங்கள் கிடந்ததைத் தமிழர் கண்டு, அவர்களை தெய்வங்களென்று போற்றும் கீழ் நிலைக்கு வந்திருக்க மாட்டார்கள். கம்பரோ, கவித் திறமையினால் ஆரிய இராமனைக் குற்றங்குறையற்ற சற்பாத்திரனாக்கிக் காட்டி வழிபாட்டுக்குரிய தெய்வமாக்கிவிட்டார் என்பதுதான் அறிஞர் அண்ணாவின் விவாதம். கம்பனின் கவித் திறனை அவர் எந்த இடத்திலும் குறைத்து மதிப்பிடவில்லை.