கம்ப ராமாயணத்தின் வழியாக மேலாண்மைக் கோட்பாடுகளையும், கண்ணதாசன் பாடல் களின் வழியாக வாழ்க்கை மற்றும் மேலாண்மைச் சிந்தனைகளையும் வாசகர் களிடம் கொண்டு சென்ற வள்ளியப்பன், தற்போது திருக்குறளில் பொதிந்துள்ள மேலாண்மை மற்றும் வாழ்க்கை நெறிகளை விளக்குகிறார். திருக்குறளில் இல்லாதது என எதுவுமில்லை. தனி மனித ஒழுக்கம் தொடங்கி தலைமைப் பண்பு வரை அனைத்தையும் வரையறுக்கும் ஒரு பெட்டகம் அது. தனி மனிதனாக, குடும்ப உறுப்பினராக, சமுதாய பொறுப்புள்ள மனிதனாக, நாட்டின் பெருமைமிகு குடிமகனாக எப்படியெல்லாம் ஒருவர் வாழவேண்டும் என்பதோடு, மனிதவள நிர்வாகம் குறித்தும்கூட 2000 ஆண்டுகளுக்கு முன்பே சிந்தித்திருக்கிறார் திருவள்ளுவர். அவற்றில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், அலுவலகத்தில் பணிபுரிபவர்கள், மாணவர்கள், குடும்பத் தலைவர்கள் எனச் சமூகத்தின் பலதரப்பட்டவர்களும் தங்களது வாழ்க்கையில் வெற்றிபெறுவதற்கு வழிவகை செய்யும் 100 குறட்பாக்களை, தற்போதைய நடைமுறை எடுத்துக்காட்டுகளுடன் இந்நூல் சுவைப்பட விவரிக்கிறது. பொருளாதாரச் சூழல்கள் பெருகிவரும் போட்டிகள் நிறைந்த இவ்வுலகில், எவரும் வெற்றிபெறுவதற்கான வழிமுறைகளைத் திருக்குறள் மூலமாக விளக்கும் பணியை எளிமையாகக் கையாண்டுள்ளார் நூலாசிரியர் சோம. வள்ளியப்பன். பொருளாதார நிபுணர், மேலாண்மை வல்லுநர், ஆற்றல்மிகு பயிற்சியாளர், திறமையான எழுத்தாளர் எனப் பன்முகத் திறன் கொண்ட சோம. வள்ளியப்பனின் 101ஆவது நூல் இது.