இயற்கைப் பேரிடர் என்பது நிலநடுக்கம், சுனாமி, புயல், வெள்ளம், எரிமலை வெடிப்பு, வறட்சி, நிலச்சரிவு போன்ற இயற்கை சக்திகளால் ஏற்படும் பேரழிவு நிகழ்வாகும். இது பெருமளவு உயிர்ச்சேதம், பொருட்சேதம் மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது மனிதனால் ஏற்படும் நிகழ்வுகளை உள்ளடக்காது, ஆனால் பூமியின் இயற்கை செயல்முறைகளின் விளைவாக ஏற்படுகிறது. சமீப காலங்களில் இதன் அதிர்வெண் அதிகரித்துள்ளது. இதனை மையமாகக் கொண்டு நிலச்சரிவு பல்வேறு மனிதர்களின் வாழ்வின் கனவுகளைச் சிதைத்த தன்மையை உயிர் ஓவியம் ஆக்கியுள்ளது, இந்த நாவல். இயற்கைப் பேரிடரை ஒரு செய்தியாகக் கடந்து போவோர்க்கு மத்தியில், அந்தச் சூழலில் சிக்கியுள்ள, மாண்ட பல்வேறு மனிதர்களின் கனவுகளை, அவர்களது அழுகுரல்களை, அந்தச் சூழலின் நெருக்கடிகளை நம் கண் முன் காட்டுகின்றது இந்த நாவல். கருவைச் சுமந்து ஏங்கித் தவிக்கும் தாயின் கனவு, குழந்தைப் பருவத்தின் எதிர்பார்ப்புகளோடு இருந்த ஒரு சிறுவனின் கனவு, திருமணம் பற்றிக் கனவு காணும் ஒரு பெண்ணின் கனவு இப்படிப் பலரது கனவுகளை ஒரே இரவில் கலைத்துச் சென்ற நிலச்சரிவு நிகழ்வை அவர்களின் குரலாக நின்று பதிவு செய்துள்ளவர் நிழலி.